பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்க உள்ளதாகக் கூறப்படும் புதிய இயக்கத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைவதைத் தடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, கட்சியின் அமைப்பு மற்றும் ஒற்றுமையை பாதிக்காத வகையில் அனைத்து நிர்வாகிகளும் செயல்பட வேண்டும் என்றும், எந்தவொரு புதிய அரசியல் அல்லது சமூக இயக்கத்திலும் அனுமதியின்றி பங்கேற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை தொடங்க உள்ளதாக கூறப்படும் இயக்கம் குறித்து கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்த அறிவுரை புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக பாஜக தலைமையிடம் இருந்து விரிவான அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
அதேநேரத்தில், கட்சியின் கொள்கை மற்றும் அமைப்பு கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே இந்த அறிவுறுத்தலின் நோக்கம் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் பாஜக தலைமையின் நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



