அதிமுகவில் S. P. வேலுமணி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தவெக கட்சியில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அரசியல் மாற்றம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுகவுக்குள் நிலவி வந்த உள்கட்சிப் பிரச்சனைகள் மற்றும் அதிகார மோதல்களின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக வேலுமணி அணியில் இருந்த முக்கிய முகங்கள் தவெகவுக்கு மாறியது அரசியல் கணக்குகளில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள், “தவெக தனது கட்சியை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த இணைவு தொடர்ந்து மேலும் சில அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் நிலைப்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.


