சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (PG TRB) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்வை ஒத்திவைக்கும்படி நேரடியாக உத்தரவிட முடியாது என்று மறுத்துள்ளது.
நீதிமன்றத்தின் நிலைப்பாடு:
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெற இருப்பதால், தேர்வுக்குத் தயாராகக் கூடுதல் அவகாசம் தேவை என்று தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, தேர்வர்களின் இந்தக் கோரிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்று நேரடியாகத் தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட மறுத்துவிட்டபோதிலும், தேர்வர்கள் கோரிக்கையை TRB பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது, தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு விவரம்:
இந்தத் தேர்வு முதலில் செப்டம்பர் 28-ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் TNPSC குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நடைபெற்றதால், தேர்வர்கள் நலன் கருதி, தேர்வு தேதி அக்டோபர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


