தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து, வருகிற ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் புதிய கல்வியாண்டுக்கான தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாத நிலை காணப்படுகிறது. குறிப்பாக மதியம் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனால் பள்ளிகள் திறப்பை குறைந்தது மேலும் ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடமிருந்து வலுத்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து பெற்றோர்கள் தொடர்ந்து கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சூழலில், பள்ளிகள் திறப்பு தேதி குறித்து இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெயிலின் தாக்கம், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் வானிலை அறிக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படுமா அல்லது மேலும் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


